புதன், 25 பிப்ரவரி, 2015

குறும்படம் எடுக்கும் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். குறும்படம் எடுப்பவர்கள் கவனிக்க வேண்டியவை.....
  குறும்படம் எடுக்கும் அனைவரும் கவனத்தில் வைக்க வேண்டிய சில அம்சங்கள்.
1. 1990கள்வரை நாடகங்கள் பார்வையாளர்களிடம் ஒரு கதையைப் பரிசோதிக்கப் பயன்பட்டன. ஒரு நாடகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தபோது, அவை அப்படியே திரைப்படமாக எடுக்கப்பட்டன.
ஆனால் அத்தகைய நாடகங்கள் முன்னோட்டம் மட்டுமல்ல. முழுமையான திரைக்கதையைக் கொண்டவை. அதனால்தான், முழுமையான பல நல்ல நாடகங்கள் தமிழ் சினிமாவில் திரைப்படங்களாக மாறிப் பெரும் வெற்றி கண்டன. அனேக குறும்படங்கள் முழுமையான திரைக்கதை அல்ல. அவை அதிகபட்சம், ஒரு முன்னோட்டம் மட்டுமே.
2. குறும்படங்கள் எடுத்த அனுபவம் பெரிய படம் எடுக்க ஒரு பாஸ்போர்ட் அல்லது அறிமுக முகவரி மட்டுமே. பயணச் சீட்டுகள் அல்ல. பாஸ்போர்ட் இருந்தாலும், டிக்கெட் இல்லாமல் எப்படி வெளிநாடு பயணிக்க முடியாதோ, அது மாதிரி பெரிய படத்திற்கான திரைக்கதை இல்லாமல் திரைத்துறையில் பயணிக்க முடியாது. கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணிதரன், நலன் குமரசாமி போன்றவர்களின் வெற்றி, அவர்களின் குறும்படங்கள் மூலம் காண்பித்த திறமை மற்றும் அனுபவத்தையும் தாண்டி, அவர்கள் உருவாக்கிய புதிய திரைக்கதைகள் அவர்களை வெற்றிகாணச் செய்தன.
3. அதிக பட்சம் 10 – 15 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தில் சொல்லப்பட்ட ஒரு சுவாரசியமான விஷயத்தை 120 முதல் 150 நிமிடம் ஓட வேண்டிய பெரிய படத்திற்குத் திரைக்கதையாக மாற்றுவது எளிதல்ல. தமிழ் சினிமாவில், இதுவரை, பாலாஜி மோகன் மட்டுமே (காதலில் சொதப்புவது எப்படி), ஒரு குறும்படத்தைப் பெரிய படமாக மாற்றி வெற்றிகண்டவர். கடந்த இரு வருடங்களில் அவ்வாறு முயற்சி செய்த மற்றவர்கள் வெற்றியைச் சுவைக்கவில்லை.
4. குறும்படங்களுக்கான இலக்கணங்கள் வேறு, பெரிய படங்களுக்கான இலக்கணங்கள் வேறு. ஒரு குறும்படம் தரும் சுதந்திரத்தை 130-150 நிமிடம் ஓடும் பெரிய படத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு குறும்படத்தை எடுத்து, அதை யூட்யூப் போன்ற ஊடகங்களின் மூலம் பிரபலப்படுத்துவது இன்று பெரிய சாதனை இல்லை. பெரிய படங்கள் எடுக்க இன்று கோடிகளில் பணம் தேவை. அதை மக்களிடம் கொண்டுசெல்ல மேலும் சில கோடிகள் தேவை. பல கோடிகள் தேவைப்படும் ஒரு பெரிய படத்தை இயக்க, வெற்றிப் படமாக்க, நல்ல அனுபவமும், வெகுஜன மக்களுக்குப் பிடித்த படமாக உருவாக்கக்கூடிய திறமையும் தேவை. அதைக் குறும்படங்கள் மூலம் மட்டுமே பெற முடியாது.
5. குறும்படங்களை அனுபவத்திற்காகவும், திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல சாதனமாகவும், நாளைய இயக்குநர்கள் உபயோகிக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட குறும்படங்களில் நல்ல ஒரு பெரிய படம் உருவாகும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அவற்றைப் பெரிய படத்துக்குக்கான திரைக்கதையாக மாற்ற வேண்டும். 10 நிமிடத்திலேயே முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை, 120-150 நிமிடங்களுக்கு நீட்டிக்கப் போராடுவது அனைவருக்கும் கஷ்டத்தில்தான் முடியும்.
6. எப்படியாவது காட்சிகளை அடுக்கி, ஒரு குறும்படத்தைப் பெரிய படமாக மாற்றும் முயற்சி வீணே. 10 நிமிடக் குறும்படத்தில், ஒரு தொடக்கம், ஒரு விஷயம், ஒரு முடிவு எனச் சொல்லப்பட்டால் போதும். ஆனால் ஒரு பெரிய படத்தில், 10-15 நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பங்களை ஏற்படுத்தினால்தான் திரைக்கதை சுவாரசியமாகச் செல்லும்.
குறும்படங்கள் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை உருவாக்கிவருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அவைகளை அறிமுகமாக மட்டும் எடுத்துக்கொண்டு, முடிந்தால் நல்ல இயக்குநர்களிடமும் பயிற்சி எடுத்து, புதிதாக வெகுஜன ரசனைக்கான திரைக்கதைகளை உருவாக்கும்போது, வாய்ப்பும் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
  1. குறும்பட இயக்குனர் ஆவது எப்படி?
  2. குறும்படத்திற்கு கதை எந்த அளவு முக்கியம்?
  3. கதை எழுதும் எல்லாராலும் டைரக்ட் செய்ய முடியுமா இல்லை தொழில் நுட்ப அறிவு தேவையா?
  4. கதை விவாதங்களில் டேச்னிகள் டீம் இருப்பது அவசியமா? 
  5. உங்கள் கதை விவாதம் எப்படி எந்த சூழ்நிலையில் நடைபெறும்? 
  6. குறும்படத்தில் பெண்களை நடிக்க வைப்பதில் இருக்கும் சவால்கள் மற்றும் அதை எதிர்கொள்வது எப்படி? 
  7. படத்திற்கான பட்ஜெட், லொகேஷன் மற்றும் இதர விசயங்களை கையாள்வது எப்படி?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக